வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வாழ்க்கை!

நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.

எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்


கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன”

ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …
இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் …

தன்னைத்தவிர!

“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை”

ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.

ஆசை அவனை ஆட்டிவைக்கிறது.

நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..

எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!
வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்தின் மதிப்புத் தெரியாது,
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்.

இன்பம் துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.

துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது !
இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !

என்பதை கூறுவதே இப்பாடல்.

யாரும் தொலைக்கவில்லை !

ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் …..

நிம்மதியை..!

அறிவோமா அறிவியல்: மூளை ஒரு அதிசயம்!

அறிவோமா அறிவியல்: மூளை ஒரு அதிசயம்!


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். ஆல்கஹால் நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
ஒரு நியூரான் செல்

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.


4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்.
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள். அறுவை சிகிட்சை நடப்பதை காண இங்கே சொடுக்கவும்.
(இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). வெண்ணை வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.


12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்.

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.


14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

விட்டமின் B 12 லும் மூளை சுருங்குதலும்

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B 12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாததல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B 12 குறைபாடு தான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. நீரிழவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்ட்ரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.
காரணம் இதுதான் 107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும், வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, மூளையின் பொருண்மிய நிலையை அறிய NRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன. அவர்கள் எவரது இரத்தத்திலும் B 12 இன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது, அவர்களுக்கு இரத்தத்தில் B 12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும், ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.
இதன் அர்த்தம் என்ன? நாம் வழமையாக எதிர்பார்க்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே, எமது உணவில் B 12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
தாவர உணவுகளில் விற்றமின் B 12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12 குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள் மற்றும் முதியவர்களக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும் நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும். அத்துடன், நரம்புகள் பாதிப்படைவதால், கால், கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.
விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும், மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை. அத்துடன், அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை. எனவே, வயதானவர்கள் மேற்கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.
- மருத்துவர் எம்.கே.முருகானந்தன்
இந்த ஊருக்கு (ஜப்பானுக்கு) படிக்க வந்ததுக்கப்புறம், பொழுதுபோக்கு அப்படீங்கிற வார்த்தைக்கு அர்த்தம் மாறிப்போச்சா இல்ல சுத்தமா இல்லாமையே போய்ட்டுதாங்குற ஒரு சந்தேகம், மனசுல அப்பப்போ வந்துபோகும். ஏன்னா, படிக்கும்/ஆய்வு செய்யும் நேரம் போக, பொழுதை வேறுவிதமாய் கழிக்க கிடைக்கும் சில சனி, ஞாயிறுகளில் பௌலிங், கராஒக்கே இப்படி எங்கேயாவது போவதுண்டு!
அப்படிப்போகும் விளையாட்டு மையங்களிலெல்லாம் (கேம் சென்டர்கள்), சில பல தளங்களைத் (ஃப்ளோர்கள்) தாண்டியே பௌலிங் பகுதி இருக்கும். அந்த ஆரம்ப தளங்களைத் தாண்டும்போது, லொட்டு….லொட்டு…..லொட்டு என்று ஒரே இரைச்சலாவே இருக்கும். இவ்வளவு சத்தம் வர்ற மாதிரி அப்படி என்னதான் பண்றாய்ங்கன்னு ஒரு நாள் போய்ப் பார்த்தா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன மாதிரி இருந்தது…..?!
அட ஆமாங்க, என்னத்துக்கு பண்றாய்ங்கன்னே தெரியாதமாதிரி (ஒரு வேளை நமக்குத்தான் தெரியலையோ), கியர் மாதிரி இருக்குற எதையோ புடிச்சி இப்படியும் அப்படியும் அடிச்சிக்கிட்டு, வெளையாட்டுங்கிற பேர்ல ஒரு ஆர்பாட்டத்தையே பண்ணிக்கிட்டு இருந்தாய்ங்க!
இவிங்களுக்கெல்லாம் வேற வேலையோ இருக்காதோ? இதே பொழப்பா வந்து உக்காந்துக்கிட்டு, அந்த வழியா போற வர்ற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு தலைவலிய உண்டுபண்றாய்ங்களேன்னு எனக்கு நானே புலம்பிக்குவேன். பின்ன கூட வர்ற ஜப்பான்காரங்கிட்டயா சொல்ல முடியும் இவிய்ங் குடுக்குற அளப்பரைய?!
இதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்டச் சொல்றேன்னா, இதுவரைக்கும் நான் என்னவோ இந்த மாதிரி விளையாட்டு மையங்கள்ல வந்து இப்படி இம்சைய குடுக்குற கும்பல், வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுந்தான் வெளையாடுறாய்ங்க போலிருக்குன்னு ரொம்ப அப்பாவியா (?) நெனச்சிக்கிட்டு இருந்தேன். என்ன…. நீங்களுமா?!
ஆனா, சமீபத்துல வெளிவந்த ஒரு ஆய்வுச் செய்திய படிச்சதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, மூளைப்பயிற்ச்சி விளையாட்டுங்கிற பேர்ல, சில/பல விளையாட்டு மென்பொருள் நிறுவனங்கள் கொடுத்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள நம்ம்ம்பி…..?!, இந்தக் கூட்டத்துல பாதிப்பேருக்கு மேல, பல விளையாட்டு மையங்களுக்குப் போய் மூளைக்கு பயிற்ச்சிக் குடுக்குறதா நெனச்சிக்கிட்டு வெளையாடுறாங்கன்னு…..
என்னங்க, நான் சொல்றது எதாவது புரியுதுங்களா? இல்லைன்னாலும் பரவாயில்லை, வாங்க அந்த ஆய்வுச் செய்திய பத்தி இன்னும் விரிவா படிப்போம்……(நீங்க வேணாம் விடுப்பான்னு கெஞ்சி கேட்டாலும் உங்கள விடுற மாதிரி இல்ல ;-) )
கணினி விளையாட்டு விளையாடு! புத்தியை (IQ) கூட்டு?!
மேலே நான் குறிப்பிட்ட, மூளைக்கு பயிற்ச்சி தருவதாய் சொல்லும், கணினி 
விளையாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் எப்படி இருக்கும்னா, “ஒரு கணினி விளையாட்டு விளையாடு, உன்னுடைய புத்தியை/IQ வை அதிகமாக்கு” இப்படித்தான் இருக்குமாம். இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்தவுடனே கொஞ்சங்கூட யோசிக்காம உடனே குறிப்பிட்ட அந்த மென்பொருளை வாங்கி விளையாட ஆரம்பிச்சிடுறாங்க குழந்தைங்க, உண்மை தெரியாமையே?!
இது மாதிரியான மூளைப்பயிற்ச்சி விளையாட்டு மென்பொருள்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை அல்லது மோசடியாயிருக்கும்னு தெரிஞ்சிக்க/கண்டுபிடிக்க, பி.பி.சியின் அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்தயாரிப்பாளர்கள், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரில் இருக்கும், மூளை ஆய்வு மையத்தை (MRC Cognition and Brain Sciences) தொடர்புகொண்டு, இத்தகைய விளையாட்டு மென்பொருள்களின் தகுதியை சோதனை செய்ய ஒரு ஆய்வு நடத்துமாறு கேட்டுக்கிட்டாங்களாம்!
ஏட்ரியன் ஓவென் என்னும் ஆய்வாளர் நடத்திய, சுமார் 11,430 ஆரோக்கியமானவர்கள் பங்குபெற்ற,  நியாபக சக்தி, கவனம், கணக்குப் பாடத்தில் பயிற்ச்சி மற்றும் பல்வேறு மூளைச் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தும்/அதிகரிக்கும் விளையாட்டு என்று விளம்பரப்படுத்தப்பட்ட விளையாட்டு மென்பொருள்கள் குறித்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு……
  1. விளையாடப்படும் குறிப்பிட்ட ஒரு விளையாட்டில் மேம்படுவதைத் தவிர, இவ்விளையாட்டுகள் குழந்தைகளின் (விளையாடுபவரின்) மூளையின் செயல்திறனை, எந்தவிதத்திலும் பாதிக்கவோ/அதிகரிக்கவோ இல்லை
  2. விளையாட்டு மென்பொருள்களைப் பயன்படுத்தியவர்களும், பயன்படுத்தாது சாதாரணமான மூளைப்பயிற்ச்சிகளில் ஈடுபட்டவர்களும், ஆய்வின் முடிவில் ஒரே மதிப்பெண்ணைத்தான் பெற்றிருந்தார்கள்!
விளையாட்டு மென்பொருள் நிறுவனங்களைத் தொடங்கு! ஊரை நல்லா ஏமாத்து?!
சமீபத்தில், Nature என்னும் உலகப் பிரபல அறிவியல் வார இதழில் வெளியான இந்த ஆய்வுச் செய்தியை படித்த, ஸ்வீடன் நாட்டு கரோலின்ஸ்கா கல்விமையத்தின் நரம்பியல் விஞ்ஞானி டார்கெல் க்லீன்பெர்க் சொல்றாரு, “ஒரே ஒரு ஆய்வின், பாதகமான ஒரு முடிவைச் சொல்லும் ஒரு சோதனையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த விளையாட்டு மென்பொருளின் தரத்தையும், தகுதியையும் குறைத்துச் சொல்வதும், பலனற்றது எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று”?!
மக்களே….இங்கேதான் நீங்க கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா, இந்த டார்கெல் அப்படீங்கிற விஞ்ஞானி (?), மூளைப்பயிற்ச்சியை ஏற்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் விளையாட்டு மென்பொருள்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் அப்படீங்கிறதுதான் அது. இப்போ நீங்களே முடிவு பண்ணிக்குங்க, இந்த ஆளு சொல்றத ஏத்துக்கனுமா வேணாமான்னு?!
இவிய்ங்களுக்கு இதே பொழப்புங்க! அதாவது ஒரு நல்ல கல்வி நிறுவனத்துல பணிக்காலம் முடிஞ்சி ஓய்வு பெற்றுக்கொண்டு பிறகு, தன் துறைக்குத் தொடர்பான ஒரு நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டியது. அதுக்கப்புறம், தன்னோட ஆதிகால விஞ்ஞான அருமை பெருமைகளை எல்லாம் மூலதனமா வச்சிக்கிட்டு, இப்படி எதையாவது ஒரு மென்பொருளை உருவாக்கி ஊரை ஏமாத்தி சம்பாதிக்க வேண்டியது?!
தவறான சில பேரு இது மாதிரியான மென்பொருள்கள் உருவாக்கி மக்களை எப்படி ஏமாத்துறாங்கன்னு, கீழே இருக்குற காணொளியில பாருங்க (அதுக்காக இது ஒரு ஏமாத்து வேலைன்னு நான் சொல்லலீங்கோவ்!)http://www.youtube.com/watch?v=gc0EOrgLmm8&feature=player_embedded#at=30
என்னங்க, காணொளியைப் பார்த்தாச்சா? ஏங்க….இப்ப நீங்களே சொல்லுங்க, இது மாதிரி ஒரு அழகான நடிகையை வச்சி ஒரு மென்பொருளை விளம்பரப்படுத்தினா வாங்காம இருப்பாங்களா மக்கள்??
அதுக்காக, இப்படி ஒரு ஆய்வின் முடிவை கேள்விக்குள்ளாக்கும் எல்லா விஞ்ஞானிகளுமே இப்படித்தான்னும் சொல்லிட முடியாதுங்கிறதையும் நீங்க புரிஞ்சிக்கனும்?! ஆக, எந்த ஒரு ஆய்வின் முடிவையும் சந்தேகித்துக் கேள்வி கேட்கும் உரிமை, விஞ்ஞானிகளுக்கும், படித்தவர்களுக்கும் மட்டுமல்லாது, பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு!
அதனால, இந்த ஆய்வு குறித்த உங்க கருத்துகளையும் பதிவு செஞ்சுட்டுப் போங்களேன்!

மூளையின் செயல்திறனும்….மகிழ்ச்சி

    பிறரின்  முகபாவனைகளை உணர நம் மூளை எடுத்துக்கொள்ளும் அவகாசம் எவ்வளவு தெரியுமா? வெரும் 0.1 வினாடிகள்தான்! ஆச்சரியம் அதுவல்ல.அத்தகைய வேகமான செயல்திறன் கொண்ட மூளையால் எல்லா முகபாவனைகளும் ஒரே வேகத்தில் உணரப்படுவது இல்லை! மாறாக மகிழ்ச்சியை ப்ரதிபலிக்கும்  முகபாவனைகள் அதிவேகமாகவும்,சோகத்தை ப்ரதிபலிக்கும்  முகபாவனைகள் தாமதமாகவும் உணரப்படுகிறது என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி! மூளைக்கு கூட மகிழ்ச்சியைத்தான் மிகவும் பிடிக்கிறது!

மூளை வளர்ச்சி குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதே சிறந்தது!

disable-2nd‘மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கை‘ என்ற தலைப்பில் நாம் எமது இணையத்தளத்தில் மார்ச் மாதம் 19 ஆம் திகதி கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம்.வாசகர்களே! அதன் இரண்டாம் பாகம் தொடருகின்றது.
இலங்கையில் மாத்திரமின்றி உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் மூளை வளர்ச்சிக்குன்றி நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறு குறைப்பாட்டுடன் பிறப்பதற்கு காரணம் என்ன? சிலர் பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தைகளாக இருக்கிறார்கள் சில வருடங்கள் செல்ல அவர்களுடைய செயல்பாடுகள் மாற்றத்தினால் அவர்கள் இனம்காணப்படுகிறார்கள் எனவே இதற்கு மருத்துவ ரீதியில் விளக்கம் அளிக்கிறார் டாக்டர் நஜீமுடீன்…நேர்காணல் எம்.சாந்தி
கேள்வி: இவ்வாறு குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் என்ன?
dr-1எமது சகல வேலைகளையும் செய்வதற்கு மூளையே கட்டுப்பாட்டறை. இங்கிருந்துதான் கட்டளைகள் செல்ல வேண்டும், அவற்றினைத்தான் உடலின் ஏனைய பகுதிகள் நிறைவேற்ற வேண்டும். இந்த மூளை பாதிப்படைகையில்தான பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.மூளை வளர்ச்சி ஆரம்பிப்பது முளையில், அதாவது கருவில். அது மூன்று வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் 16 வயது வரை அபிவிருத்தியடைகிறது. வளர்ச்சி என்பது வேறு, அபிவிருத்தி என்பது வேறு.வளர்ச்சி என்பது மூளையின் அளவிலும் கலங்களின் எண்ணிக்கையலும் ஏற்படும் அதிகரிப்பு, அபிவிருத்தி என்பது அந்தக் கலங்கள் சிக்கலான தொழற்பாடுகளுக்கென இசைவாக்கமடைதல்.
இந்த வளர்ச்சியின் அசாதாரண நிலையென்பது
1. ஜீவ அணுவிலிருந்து நிறமூர்த்தங்களால் தீர்மானிக்கப்படலாம் ( உ-ம் டௌண் சிண்ட்ரோம்)
2. குழந்தையின் உருவாகும் திறனினால் தீர்;மானிக்கப்படலாம்
3. தாய்க்கு ஏற்படும் நோய்களினால் பாதிப்படையலாம் (உ-ம் ருபெல்லா, மலேரியா, நீரிழிவு, உயர் இரத்தத்துடன் சேர்ந்த வலிப்பு (நுஉடயஅpளயை) போன்ற பல நோய்கள்)
4. மூளை வளர்ச்சிக்குத் தேவையான போஷாக்குகள் மற்றும் பிராணவாயுக் குறைவுகளால் ஏற்படலாம்.
5. மூளை நேரடியாக தொற்று நோய்க்காளாகிப் பாதிப்படையலாம்
6. குழந்தையைப் பிரசவிக்கையில் ஏற்படக் கூடிய பலவித பிரச்சினைகளால் ஒட்சிஜன் மற்றும் குளுக்கோஸ் ஆகியன குறைவடைந்து மூளைக் கலன்கள் பாதிப்படையலாம் உ-ம்:- கழுத்தைச் சுற்றிய மாக்கொடி, தடைப்பட்ட பிரசவம், சிக்கலான (ஆயதப் )பிரசவம் மற்றும் அதன் தாக்கங்கள்.பிரசவத்திற் போது தலை நசிவடைதல். காயமடைதல்)
7. பிரசவத்தின் பின்னரான தொற்றுக்கள் மூளையைத் தாக்குதல் ( உ-ம் மூளைக் காய்ச்சல், நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய எந்த நோய்களும்) மூலம் ஏற்படலாம்
இவ்வாறு பலவித காரணங்களால் இந்தப் பரிதாப நிலை சம்பவிக்கிறது
கேள்வி:தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தைகள் இவ்வாறான தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறிய முடியுமா?
ஒரு சிலவற்றைக் கண்டறியலாம். உ-ம் சிறிய. பெரிய தலைகள் (மைக்ரோசெபலி, மாக்ரோ செபலி, முண்ணாண் குறைபாடுகள். இன்னும் பல பிரச்சினைகள் ஸ்கேன் மூலமோ அல்லது கருப்பாயச் சோதனை(அம்னியோடிக் நீர்) மூலமோ கண்டறியப்படலாம்
கேள்வி: அவ்வாறான வேளையில் மருத்துவ ரீதியில் எவ்வாறான சிகிச்சைகளை வழங்கப்படும்?
சில வேளைகளில் கருச்சிதைவு சிபாரிசு செய்யப்படும். ஆனால் கண்டறிவதற்குத் தாமதமானால் பிரச்சினை தீர்வின்றித் தொடரும். இதில் ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால் இப்படியான குழந்தைகள் உயிருடன் பிறப்பதோ பிறந்து கன நாள் உயிர் வாழ்வதோ மிகவும் குறைவானது.
கேள்வி: பிறந்தவுடனே குழந்தையில் இந்த குறைப்பாட்டை கண்டறியும் பட்சத்தில் இவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக பிரத்தியோகமான மருத்துவ மனைகள் ஏதும் உண்டா?
இல்லை. ஆனால் இவர்கள் விஷேட கவனிப்புக்கும் கண்காணிப்பிற்கும் உட்படுவர்
கேள்வி: இக்குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதாயின் அவர்களை எவ்வாறு பாராமரிப்பது சாதாரண முறையினை கூறுங்கள்?
வீட்டில் வைத்துப் பராமரிப்பது என்பது மிகவும் சிறந்தது. ஆனால் அதற்கு விஷேட பயிற்சி அவசியமாகிறது, நிறையப் புரிந்துணர்வு, உதவி, ஏனையோரது ஒத்துழைப்பு, பொறுமை எல்லாம் அவசியம். முக்கியமாக ஏனைய குழந்தைகளின் ஆதரவான அரவணைப்புத் தேவைப்படும்.
சாதாரணமாக அதற்கென ஒருவர் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். முக்கியமாக உணவு, உடை, சுகாதாரம், ஏனைய தேவைகள், பயிற்சிக்கென விஷேட முகாம்களுக்குக் கொண்டு செல்லல் ஆகியன அவசியப்படலாம்
கேள்வி: இவர்கள் ஓரளவு குணம் பெற்றப்பின் சாதாரண மக்களைப்போல வேலைக்குச்செல்லலாமா? திருமணம் முடிக்கலாமா?
சிரமமான ஒரு கேள்வி, மூளை வலுவிழந்த மனிதன் குணமடைவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனெனில் இது ஒரு நோயல்ல குணமடைவதற்கு. ஒரு குறைபாடு. மூளைக் கலங்கள் இறந்த பின் அவை மீண்டும் வளருவதுமில்லை, புதுப்பக்கப்படுவதுமில்லை.
எனவே ஒரு குறைபாடு உள்ள குழந்தையின் குறைபாட்டின் கனதியினைப் பொறுத்து இது மாறுபடலாம். திருமண முடித்து வாழந்தவர்களும் இருக்கின்றனர்
கேள்வி: இவ்வாராண குறைப்பாடுகளுடன் குழந்தைகள் இனிவரும் காலங்களில் பிறக்காமல் இருக்க கர்ப்பிணிகள் தங்களுடைய பிரசவ காலம் வரை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?
அதற்கென எடுத்த ஒரு நடவடிக்கைதான் ருபெல்லா எனும் பாரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இருந்தாலும் கூட பரம்பரை, நிறமூர்த்த, நுகத்தின் பிழையான உருவாக்கம் போன்ற தவிர்க்க முடியாத பிரச்சினைகளைக் கைவிட்டாலும் இந்த நிலைமையினைத் தவிர்க்கக் கூடிய பல நடவடிக்கைகள் எம்முன் உள்ளன.
1. உரிய வயதில் குழந்தை பெறல்( 40 அல்லது 45இற்குக் கூடிய வயதிலும் 18-19 வயதுக்குக் குறைந்த வயதிலும் குழந்தை பெறுதலைத் தவிர்த்தல்)
2. திருமண பந்தத்தில் இரத்த சொந்தங்கள் இணையாதிருத்தல்
3. இடைவெளி விட்டு அளவோடு பெறல்
4. கர்ப்பிணியானவுடன் நன்கு விடயம் தெரிந்த வைத்தியரின் கண்காணிப்பின் கீழ்வருதல்.
5. கர்ப்ப காலப் பராமரிப்பினை முறையாகப் பேணல்
6. கர்ப்ப காலத்தில் நோய் நொடிகள் அணுகாமலும், சிறந்த போஷாக்கினைப் பெற்றும் அமைதியாகவும் ஆறுதலாகவும் காலத்தைக் கடத்தல்
7. வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையில், பரிச்சயப்பட்ட வைத்தியரின் கண்காணிப்பில் பிரசவித்தல்
8. பாதுகாப்பான ருபெல்லா, மற்றும் மலேரியா பிரதேசமானால் அதற்குரிய தடுப்பு மருந்து மட்டுமல்லாது போலிக்கமில மாத்திரையினையும் தவறாது எடுத்துவரல்.
9. பிள்ளையை நோய்க் கிருமிகள் தொற்ற விடாது பாதுகாத்தல், தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளல்
10. தாய்ப்பாலூட்டல்,சிறந்த போஷாக்கினை அளித்தல் போன்ற இன்னும் பல.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குழந்தைகளின் மனதுக்குள்ளே....

குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல.



குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. எங்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்-வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள்.

குழந்தையின் மூளை கற்றுக் கொளவதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் அவள் என்ன எல்லாம் கற்றுக் கொள்கிறாள்? தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, ஆராய்ந்து திரிவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்னர் மனிதருக்கென்றே உரிய சிறப்புத் தன்மையான மொழியைக் கற்க வேண்டும். கல்வி நீண்டு கொண்டே போகும். வாழ்நாள் முழுவதும்.

ஆரம்ப கால மன வளர்ச்சி நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கிவந்து விளையாட வேண்டும். மேற்கொண்டு குழந்தையின் மன வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது?

பெற்றோர்கள் தங்கள் 8-10 மாதக் குழந்தையை அவளது ஆசனத்தில் இருத்திவிட்டு, சமையலறையில் அடுத்த நேரத்திற்கான உணவைத் தயார் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை இவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கவனமாக அவதானிப்பாள். இருவரும் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகிறார்கள். எதை எதையோ எடுக்கிறார்கள். பிறகு அவற்றை வேறு எங்கோ வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யும் போது, இருவரும் ஏதோ ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்கிறார்கள். இவ்வளவு சிக்கலான நடப்புகளையும் குழந்தைகள் மிக அவதானமாக தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. அவர்கள் மேலும் வளர்ந்து வர, இவை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியையும் மொழியையும் எவ்வாறோ குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். ஆயிரமாயிரம் பொருள்களுக்கும் ஆயிரமாயிரம் செயல்-களுக்கும் அவர்கள் இவ்வாறான தொடர்புகளை மனதில் உண்டாக்குவார்கள்.

அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்ணோக்கு, திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டி-ருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப்படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக் காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும்போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று அவள் கேட்கும்போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால் அவள் அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடுவாள்.

இவ்வயதுக் குழந்தைகள் எந்தச் சிக்கலான செயலையும் சிறு சிறு செயல்களாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் விளையாடும்போது சில பொருள்களை எடுத்து ஒரு விளையாட்டு வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் அவற்றை வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பொருள்களை ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்-திற்குக் கொண்டு போதல் என்ற இந்தச் செயலைக் குழந்தைகள் மிகச் சரியாக சிறிய செயல்களாக அறிந்து கொள்கிறார்கள். இதைக் கவனிக்கும் குழந்தையும் அதே போல ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்து நாம் செய்ததை அப்படியே செய்து காட்டும் திறமை வந்துவிடும்.

பிள்ளைகளின் மூளை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளர்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல கோடி தொடுப்புகள் மூளைக்குள் ஏற்படுத்தப் படுகின்றன. இந்தத் தொடுப்புகளே எதிர்காலத்தில் அவர்கள் கற்கும் திறனையும், உணர்ச்சிகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கின்றன. குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.


(படங்கள்: இணையத்திலிருந்து)

சனி, 17 ஏப்ரல், 2010

வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்

வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்

வங்களின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும். ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது. 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும்.

ஆந்திரா வங்கி (www.andhrabank-india.com )

* ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை
* தனிமனித விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு

பரோடாவங்கி (www.bankofbaroda.com )

* மானாவாரி விவசாயத்திற்கு பழைய டிராக்டர்களை வாங்குதல்
* வேளாண் மற்றும் கால்நடை இடுபொருட்கள் வழங்கும் முகவர்கள்/ விநியோகஸ்தர்கள்/ விற்பனையாளர்களுக்கான நடப்பு முதலீடு
* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுதல்
* தோட்டக்கலை வளர்ச்சி
* கறவை மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நடப்பு முதலீடு
* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வேளாண் உபகரணங்கள், கருவிகள், உழவு மாடுகள் வாங்குவதற்ககும், நீர்ப்பசானவசதிகளை உருவாக்குவதற்குமான நிதி உதவி.

பாங்க் ஆப் இந்தியா (www.bankofindia.com)

* ஸ்டார் பூமீஹீன் கிஸான் அட்டை - கூட்டு முறையில் விவசாயம் செய்வோர், எழுத்தின் படி மற்றும் எழுத்து மூலமற்ற குத்தைதாரர்கள் ஆகியோருக்கு
* கிஸான் சமாதான் அட்டை - பயிர் சாகுபடி மற்றும் அதை சார்ந்த இதர முதலீடுகளுக்கு
* பி.ஓ.ஐ. ஷதாப்தி கிருஷி விகாஸ் அட்டை - விவசாயிகளுக்கான எந்நேரமும் எவ்விடத்திலுமான மின்னணு வங்கி அட்டை
* வீரிய ஒட்டு விதை உற்பத்தி, பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு ஓப்பந்த வேளாண்மைக்கான நிதி உதவி
* சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிருக்கான சிறப்புத் திட்டங்கள்.
* ஸ்டார் ஸ்வராஜ்கர் பிரஷிக்ஷன் சன்ஸ்தான்விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சி
* பயிர்க் கடன்கள் - மூன்று லட்சம் வரை (வருடத்திற்கு ஏழு சதவீத வட்டியில்)
* பிணை உத்தரவாதம்: 50000 ரூபாய் வரை, பிணை உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. ஆனால் 50000 ரூபாய்க்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும்

தேனாவங்கி (www.denabank.com)

தேனா குஜராத், மகாராஷ்ரா, சட்டீஸ்கர் மற்றும் யாத்ராவின் யு.டி. மற்றும் நகர் ஹாவேலி ஆகியற்றில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் வங்கி தேனா வங்கியாகும்.

*
தேனா கிஸான் தங்கக்கடன் அட்டைத் திட்டம்
*
அதிகபட்சம் பத்துலட்சம் ரூபாய்வரை கடன் அளிக்கப்படும்
*
குழந்தைகளின் கல்வி உட்பட வீட்டுச் செலவுகளுக்காக பத்து சதவீதம்வரை அளிக்கப்படும்
*
ஒன்பது வருடம்வரை திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம்
*
வேளாண் உபகரணங்கள், டிராக்டர்கள், நீர்தெளிப்பு/ சொட்டுநீர் பாசனமுறைகள், மின்சார பம்ப் செட்டுகள் போன்ற எல்லா விதமான வேளாண் முதலீட்டிற்கும் கடன் கிடைக்கும்
*
ஏழு சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய்வரை குறுகிய காலப் பயிர்க் கடன்
*
விண்ணப்பபித்த பதினைந்து நாட்களுக்குள் கடன்கள் வழங்கப்படும்
*
50000 ரூபாய் வரையிலான வேளாண் கடன் மற்றும் வேளாண் ஆலோசனை மையம், வேளாண் வர்த்தக மையங்களுக்கான கடனுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலும் பணய உத்தரவாதம் தேவையில்லை

ஒரியண்டல் காமர்ஸ்வங்கி (www.obcindia.co.in)

* ஓரியண்ட்ல் பச்சை அட்டைத் திட்டம்
* வேளாண் கடன்களுக்கான ஒருங்கிணைந்த கடன் திட்டம்
* குளிர்பதன அறைகள் / பண்டக சாலைகள் நிறுவுதல்
* முகவர்களுக்கான நிதி உதவி

இந்திய ஸ்டேட் வங்கி (www.statebankofindia.com )

* பயிர்க் கடன் திட்டம்
* சொந்த நிலத்தில் தயாரித்தவற்றைப் பாதுகாத்துவைத்தல் மற்றும் அடுத்த பருவகாலத்திற்கான கடன்களைப் புதுப்பித்தல்.
* கிஸான் கடன் அட்டை திட்டம்
* நில மேம்பாட்டுத் திட்டம்
* குறு நீர்ப்பாசனத் திட்டம்
* ஒருங்கிணைந்த அறுவடைக்கான இயந்திரங்கள் வாங்குதல்
* கிஸான் தங்க அட்டை திட்டம்
* கிருஷி ப்ளஸ் திட்டம் - கிராமப்புற இளைஞர்களுக்கு தேவைக்கேற்ப்ப டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க
* பிராய்லர் ப்ளஸ் திட்டம் - கோழி வளர்ப்பு
* முன்னோடி வங்கித் திட்டம்

சிண்டிகேட்வங்கி (www.syndicatebank.com)

* சிண்டிகேட் கிஸான் கடன் அட்டை
* சூரிய அடுப்பு திட்டம்
* வேளாண் ஆலோசனை மையம மற்றும் வேளாண் வியாரபார மையங்கள்

விஜயா வங்கி (www.vijayabank.com)

* சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள்
* விஜயா கிஸான் அட்டை
* விஜயா பிளான்டர்ஸ் அட்டை
* கிராமத் தொழிற்சாலைகள் மற்றும் கைவினை கஞைர்களுக்கான கே.வி.ஐ.சி. திட்டம்

பயனுள்ள வங்கித்தொடர்புகள்

* ராஜஸ்தான் வங்கி (www.bankofrajasthan.com)
* கனரா வங்கி (www.canbankindia.com)
* சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (www.centralbankofindia.co.in)
* கார்ப்பரேஷன் வங்கி (www.corpbank.com)
* இந்தியன் வங்கி (www.indianbank.in)
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (www.iob.com)
* இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி (www.idbibank.com)
* மைசூர் ஸ்டேட் வங்கி (www.statebankofmysore.co.in)
* இந்திய யூனியன் வங்கி (www.unionbankofindia.co.in)
* இந்திய யுனைடட் வங்கி (www.unitedbankofindia.com)
* ஆக்ஸிஸ் வங்கி (www.utibank.com)

மண் புழு உரம் தயாரிப்பு

'கார்த்திகை மாதம் பெய்தாலும் பேயும்; காய்ந்தாலும் காயும்' என்பார்கள். நல்ல வேளை மழை பெய்தது, மழையின் உபயத்தால் ஏராளமான மண்புழுக்கள் தோன்றியுள்ளன.

மண் புழு உரம் தயாரிப்பு
கழிவுகள் என்பன நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து, வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.


உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம். எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்? 1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும். 2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ ஜ் 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும். 3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும். 4. 200 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். 5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

எரு-குழி தயாரித்தல் எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.நான்கு அறை தொட்டி / குழி முறைநான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.மண்புழு படுக்கை தயாரித்தல்மண்புழு படுக்கைஅடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 150 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.• வண்டல் மண்ணின் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழி 2 மீ ஜ் 1 மீ ஜ் 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.• கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.• படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவர அல்லது கால்நடை கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.

சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.எப்பொழுது எரு தயாராகும்?

1. அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.
2. 60 - 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.
3. புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
4. மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம். மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.
5. சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.
6. இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும் நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
பொருளாதார ரீதியாக குறைவாக நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம்.
இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.
Posted by அலெக்ஸ்

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

கூழைக் கும்பிடுக்கு
பணிவென்று பேர்.

செறிவார்ந்த பொய்களுக்கு
உண்மையென்று பேர்.

ஆதாயம் தேடும் அன்புக்கு
பாசமென்று பேர்.

ஏமாற்றும் வித்தைக்கு
அனுபவமென்று பேர்.

வெட்கங்கெட்ட பிழைப்புக்கு
வாழ்க்கையென்று பேர்

இத்தனையும் கைகூடினால்
பிழைக்கத் தெரிந்தவன் என்று பேர்.
ஏழையின் சிரிப்பில்
இறைவன்
இருக்கிறானோ? இல்லையோ?
கடவுளை காண்பதற்காக
ஏழையை ஏழையாகவே
வைத்துவிடாதீர்கள்!
ஒருமுறை மக்கள் வாயில் அகப்பட்டுக் கொண்டால் எளிதில் அவர்களிடமிருந்து மீள முடியாது.