வியாழன், 5 ஏப்ரல், 2012

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருபவர். சுற்றுச்சூழல் போராளி. ஏன் வேண்டும் இயற்கை விவசாயம் என்பது குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ:

கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?

ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்பேரூரில் டி.இ.டிஇ. அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம். பிரேசில் நாட்டில் இருந்து வந்திருந்த கிரிஸ்டி என்ற பெண்மணி முக்கிய விருந்தினர். தள்ளுப் படங்களைப் போட்டுக் காட்டி
விளக்கிக் கொண்டிருந்தார்.

பச்சைப் புரட்சியினால் உழவர்கள் நிலத்தைக் கம்பெனிகள் வாங்கிக் கொண்டுவிட்டன. உழவர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களிலேயே கூலிகளானார்கள். ஏற்றுமதிக்காக வாழைத் தோட்டம் போட்டார்கள். வாழைத் தோட்டம் போட்டபோது எலிகாப்டர் மேலே பறந்து பூச்சி கொல்லி நஞ்சைத் தெளித்தது. இதுபோன்ற போக்கால் புற்று நோய்க்கு ஆளானார்கள். தோட்டத் தொழிலை எட்டிக் கூடப் பார்க்காத மனைவி மார்களும் இத்தகைய நோய்களுக்கு ஆளானார்கள். பிறப்புறுப்புக்களிலெல்லாம் ரணக் கட்டிகள்இ பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் உறுப்புக் குறைவு. அரையும் குறையுமாகப் பாலுறுப்புக்கள். படம் போட்டுக் காட்டாது. இருந்தால் இந்தக் கொடூரத்தை நம்புவது கடினம்.

படக் காட்சி முடிவில் கேள்வி நேரம். இந்தியாவில் கூட நிறைய பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். நீ காட்டிய அளவு கொடுமை இல்லையே என்று கேட்டேன். அதைக் கேட்ட கிரிஸ்டி இப்படிச் சொன்னாள்.

''அதன் விளைவு இனிமேல் தான் தெரியும்'' என்றவள் காரணமும் சொன்னான். ''முதலாவதாக இந்தியர்கள் அதிகம் இறைச்சி உண்பதில்லை. இரண்டாவதாக, நீங்கள் ஐ.எம்.எப்.பிடம் அண்மையில் தான் கடன் வாங்கியுள்ளீர்கள்.

கிரிஸ்டியின் வாக்கு பலித்துள்ளதைக் காசர்கோடு படம் பிடித்துக் காட்டுகிறது. கேரளாவில் பாலக்காடு அடுத்துள்ள காசரகோடு பகுதி உலகத்தின் பார்வையைக் கவர்ந்துள்ளது. அங்கு 7000 ஏக்கர் பரப்பில் முந்திரிக் காடு உள்ளது. அது அரசுக்குச் சொந்தம். இந்தக் காட்டில் ஏரோப்ளேன் பறந்து பறந்து நச்சு தெளித்தது. மரத்துக்கு மேலே மின் கம்பி போவதால் உயரே உயரே பறந்து நஞ்சு தெளித்தது. அதன் விளைவு பயங்கரமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த 25 கிராமத்து மக்கள் தோல் புற்று நோய்க்கு ஆளானார்கள். இவர்கள் முந்திரிக் கொட்டை தின்றவர்களும் அல்ல. முந்திரிக் கொல்லையில் வேலை பார்த்தவர் ரூம் அல்ல. இவர்கள் பயன்படுத்திய ஓடை நீரிலும் மூச்சுக் காற்றிலும் நஞ்சு குடி புகுந்துவிட்டது. மக்கள் உடலெங்கும் புற்று நோய்ப் புண்கள். வயிறு வீக்கம், மூச்சிறைப்பு இப்படிப் பாதிப்புகள். பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி ஊனம். கட்டைவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே நமக்கு இயல்பான இடைவெளி உண்டல்லவா? அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரவிரலுக்கு சுட்டுவிரலுக்கும் இடையில் பிளவு காணப்படுகிறது. நடுவிரல்களையே காணோம். குழந்தைக்குத் தலை மட்டும் பெருக்கிறது. உடம்பு சிசுவின் உடலாகவே உள்ளது. இருந்து நான்கு வயது சிறுவன் நாலுவயது குழந்தை போல உடலும் மனமும் சிறுத்துக் காணப்படுகிறான். பிறக்கின்ற கன்றுக்குட்டி மூன்று காலுடன் பிறக்கிறது.

இவற்றையெல்லாம் முதலில் கண்டுகொண்டவர் ஒரு மருத்துவர். வருகின்ற நோயாளிகள் ஒரே வகை நோய்க்கு ஆளாகியுள்ளார்களே என்று புருவத்தை நெளித்த டாக்டர் இந்தக் கொடுமையை வெளிக் கொணர்ந்தார். இவர் கடைசியாகக் கண்டுபிடித்தது. பிறக்கின்ற குழந்தைக்கு சிறுநீரகங்கள் முதுகுக்கு வெளியே தொங்குகின்றன என்பதாகும். பத்து வருடமாக இவர்கள் போராடினார்கள். கோகோ, பெப்சி புகழ் (டெல்லி) சுற்றுச் சூழல் விஞ்ஞான மையம் அனைத்தையும் சோதித்து, ''முந்திரிக் காட்டில் தெளித்த என்டோசல்பான்தான் காரணம் என்று சான்று வழங்கியது. அரசு ஒரு மூன்று பேர் கமிட்டி போட்டது. கமிட்டி மக்களைப் பார்க்காமலே தீர்ப்பு எழுதியது. ''பாதிப்பு என்டோ சல்பான் தெளித்ததால் தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை'' என்று எழுதினார்கள். அதற்கு மேலும் ஒரு மைய அரசு வேளாண் விஞ்ஞானி விடுத்த அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. அவர் சொன்னது இதுதான்.

''என்டோசல்பான் தெளிப்பதால்தான் பிறவி ஊனம் வர வேண்டும் என்பது இல்லை. நெருக்கமான உறவினர்கள் இடையே திருமணம் முடித்தால் கூட பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கும்'' என்று முத்துக்களை உதிர்த்தார்.

மக்கள் போராட்டம் ஓயவில்லை. நீதிமன்றம் சென்றார்கள். எலிகாப்டரில் என்டோசல் பான் தெளிப்பதை நீதிமன்றம் தடை செய்தது. எலிகாப்டரில் நஞ்சு தெளிப்பதை நிறுத்தி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. முந்திரிக் காட்டில் விளைச்சல் குறையவில்லை என்று செய்தி வருகிறது. அதாவது பூச்சிகொல்லிக்கே தேவை இருக்கவில்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது.

பொருள்கள் மீது பூச்சி கொல்லி தெளிக்கும்போது அவை மீது எஞ்சிய நஞ்சு படிந்திருப்பதை 1984 ஆம் ஆண்டிலேயே கோவை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது. காய், கனி, தானியம், இறைச்சி. முட்டை, பால் இவற்றில் காணப்படும் எஞ்சிய நஞ்சு தாயின் உடலில் சேமிக்கப்பட்டு குழந்தை பெற்ற பின்பு குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலிலும் வெளிப்படுகிறது என்று கண்டறிந்தார்கள். அதனால், இயற்கை வழி பயிர்ப் பாதுகாப்புத் துறை என்று ஒரு ஆராய்ச்சித் துறையே ஏற்படுத்தப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த ஒன்றையும் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று உழவர்கள் வியப்படைகிறார்கள்.

1984 ஆம் ஆண்டு போப்பால் நகரில் கார்பைடு (செவின்) என்ற அமெரிக்கக் கம்பெனியின் பூச்சி கொல்லி ஆலையில் ஒரு இரவில் நச்சுக் கசிவு ஏற்பட்டது. பல்லாயிரவர் மடிந்தார்கள். பல்லாயிரவர் முடம் ஆனார்கள். அன்று சிறுவனாக இருந்த சுனில்குமார் இன்று 25 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற செய்தி இதயத்தைப் பிழிகிறது.

பூச்சி கொல்லிகள் இத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை 1962 ஆம் ஆண்டே ''ராச்சேல் கார்சன்'' புத்தகமாக எழுதி வெளியிட்டார். அமெரிக்கர்களுக்குத் தெரிந்துவிட்டது. வேப்பங்கொட்டைச் சாறே பூச்சியையும் விரட்டும், நோய் களையும் விரட்டும் என்று. அது குறித்துத்தான் 2000 ஆண்டில் மே மாதத்தில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் வழக்கு நடந்தது. இந்த அலுவலகம் ஜெர்மன் நாட்டில் உள்ள மியூனிச் நகரத்தில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்தியாவில் இருந்து போயிருந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். காப்புரிமை வாங்கியிருந்த கம்பெனியின் பெயர் டபிள்யு. ஆர்.கிரேஸ். இந்த கம்பெனி வேப்பங் கொட்டைச் சாறு பூஞ்சாள நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி அமெரிக்காவில் ஒரு காப்புரிமை வாங்கி இருந்தான். ஐரோப்பாவிலும் ஒரு காப்புரிமையும் வாங்கி இருந்தான். டெல்லி நகரில் டாக்டர வந்தனா சிவா தலைமையில் செயல்படும் விஞ்ஞான, உயிரியல் ஆராய்ச்சி மையம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வேம்பு எங்கள் சுதந்திர மரம். நினைவு தெரியாத காலத்திலிருந்து வேம்பு எங்கள் பயிர் மருத்துவத்திலும் கால்நடை மருத்துவத்திலும் மனித மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிப்பதற்கில்லை என்பது எங்கள் வாதமாக இருந்தது. நடுவர் கம்பெனிக்காரரிடம் கேட்டார். ''நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்தது என்ன? இந்தியாவில் சிறிய அளவில் செக்கில் ஆட்டுகிறார்கள். நாங்க பெரிய அளவில் ஃபேக்டரியில் தயாரிக்கிறோம்.'' இது கம்பெனியார் பதில்.

எங்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர் கேட்டார். ''A''யைக் கண்டுபிடித்தால் அது இல்லாததைக் கண்டு பிடித்ததாகும். இன்னொருவர் A,B,C,D யெல்லாம் கண்டுபிடித்த பிறகு ''E''ஐ நீ கண்டு பிடித்தால் அது எப்படிப் புதிய கண்டுபிடிப்பு? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பெனி தோற்றுப்போனது. அதன் தோல்வியை வலுப்படுத்த இன்னுமொரு சாட்சியையும் நடுவர் முன் வைத்தோம். அது டபிள்யூ. ஆர்.கிரேஸ் கம்பெனி மும்பாய் வியாபாரிக்கு எழுதிய கடிதம். அதில் ''நீங்கள் வேப்பங்கொட்டைச் சாற்றைப் பயிர்களில் தெளித்து சோதித்துப் பா¡த்திருப்பதாக அறிய வருகிறோம். உங்கள் கண்டுபிடிப்பை எங்களுக்குக் கொடுத்தால் போதிய சன்மானம் தருவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சாட்சியத்தைப் பார்த்தபோது கம்பெனிக்காரன் மூஞ்சி வெளுத்துப் போனது. மும்பாய்க்காரர் என்னதான் செய்திருந்தார்?

வேப்பங்கொட்டைச் சாற்றைக் காய்ச்சி வடித்து 35 உழவர்களின் பருத்தி, திராட்சைத் தோட்டங்களில் தெளித்திருந்தார். இரண்டு பயிர்களிலும்
பூச்சிகளும் கட்டுப்பட்டன. நோய்களும் மட்டுப்பட்டன. இந்தியாவில் எது அதிகமாக விற்கும் என்பதை யோசித்து மும்பாய் வியாபாரி பூச்சி கொல்லி தயாரிக்கக் காப்புரிமை வாங்கியுள்ளார்.

வேப்பங் கொட்டைச்சாறு பூச்சியையும் கட்டுப்படுத்தும் நோயையும் மட்டுப்படுத்தும் என்ற உண்மை பரப்பப்பட்டால் பல உழவர்களின் தற்கொலை தவிர்க்கப்படும். ஆந்திராவில் ஆயிரம் ஆயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். காரணம் பருத்திக் காயைத் தின்ற புழுக்களை இரசாயணப் பூச்சி கொல்லிகளால் கொல்ல முடியவில்லை. ஆந்திராவில் உழவர் தற்கொலையை ஒட்டி தமிழகத்து உழவியல் விஞ்ஞானி திரு.செல்வம் மற்றும் இரு விஞ்ஞானிகளை இணைத்துக் கொண்டு ''பருத்தி உழவர்களின் நண்பர்கள்'' என்ற நூலை வெளியிட்டார். அதில் எந்த எந்தப் பூச்சிகளை எந்த எந்த பூச்சிகள் உண்ணுகின்றன என்பது வண்ண வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு உழவுத்துறை இயக்குனர், ஆந்திர மாநில உழவுத் துறை இயக்குனர் இருவரும் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகர் அணிந்துரை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள செய்தி முக்கியமானது.

''ஒரு பருத்தி வயலில் 150 உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பத்து மட்டுமே செடியைத் தின்கின்றன. 100 உயிரினம் செடியைத் தின்னும் பூச்சிகளைத் தின்கின்றன. மீதமுள்ள நாற்பது உயிரினங்கள் நன்மையும் செய்வது இல்லை. தீமையும் செய்வது இல்லை. இரசாயணத்தைத் தெளித்துத்தான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள் உயிரியல் விஞ்ஞானம் பற்றிய அறிவில்லாதவர்கள். அல்லது வேறு ஏதோ காரணத்தால் அப்படிச் சொல்லுகிறார்கள்'' இப்படி எழுதி வெளியிட்டார்கள். நமது விஞ்ஞானிகளுக்கு இந்தப் புத்தகத்தில் ஆளுக்கொன்று கொடுத்தால் நமது உண்ணும் உணவும் குடிநீரும் நஞ்சாகாமல் காக்கப்படும்.

பத்தொன்பது ஆண்டுகளாக நான் முட்டைகோசு சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தேன். அக்டோபர் கடைசி வாரம் நீலகிரி சென்றபோது மீண்டும் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. முட்டைக்கோசு உண்பதை விலக்கியதற்கான அடிப்படைக் காரணம். அது 1987 ஆம் ஆண்டு. நான்கு வார இயற்கை உழவாண்மை பயிற்சி முடித்திருந்த நேரம். பெங்களூர் போயிருந்தேன். அங்கு முட்டை கோசு அறுவடை நடைபெறுவதைப் பார்த்தேன். ஒரு பெரிய அண்டா அல்லது கொப்பரையில் என்ட்ரின், எக்கலாச்சு முதலாக என்டோசல்பான் ஈறாக பத்து வகை பூச்சி. பூசனைக் கொல்லிகளைக் கொட்டிக் கலக்குகிறார்கள். பிறகு, முட்டை கோசு, காலி ப்ளவர், பீட்ரூட், கேரட் அனைத்தையும் தயாரிக்கப்பட்டுள்ள நஞ்சுக் கலவையில் முக்கி எடுக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை நோக்கி நான் கேட்டேன். ''இந்த நஞ்சு அனைத்தும் பூச்சி, பூஞ்சனத்தைக் கொல்வதற்கு என்றுதானே சொன்னார்கள். ஏன் அறுவடை செய்தபிறகு முக்குகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் பதில் விசித்திரமானது.

''அறுவடையாகும் காய்கறிகள் உடனடியாக விற்கப்படுவது இல்லை. பல இடங்களுக்கும் போய் வாடிக்கையாளரை சந்திக்கும் போது ஐந்து நாள் கடந்திருக்கும். அதற்குள் காய்கறி வதங்கி வாடிப்போனால் விற்காமல் கடந்து போகும். அதற்காகத்தான் பூச்சி கொல்லியில் முக்கி எடுக்கிறோம்.''
மேட்டூர் இலக்கியக் கழகத்தில் இதுகுறித்துப் பேசியபோது ஒரு இளைஞர் எழுந்து, ''ஐயா நான் நீலகிரியில் இருந்து வருகிறேன். நாங்கள் முட்டை கோசை நஞ்சு கலந்த நீரில் முக்கி எடுப்பது இல்லை'' என்றார். ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். போகும் இடமெல்லாம் அதைச் சொல்கிறேன்'' என்றேன். அந்த இளைஞர் வாய்திறக்கவில்லை. நீலகிரி போனபோது தெரிந்துகொண்டேன். அவர்கள் சக்தி மிகுந்த பூச்சி கொல்லியை சக்தி மிகுந்த தெளிப்பானில் இட்டு வாரம் ஒரு முறை முட்டைகோசு, காலிஃப்ளவர் செடிகளைக் குளிப்பாட்டுகிறார்கள்.

இன்று ஒரு மாற்றம். வான்யா ஓர் என்று பெயர் சூடிய ஓர் சேவகி தனது நண்பர்களுடன் கூட ''எர்த் ட்ரஸ்ட்'' என்று ஒரு அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு சார்ந்த நண்பர்கள் ''உயிரகற்றல் வேளாண்மை''யில் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள், ஆடவர், மகளிர் அனைவரும் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்கிறார்கள். அவை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கடைக்குக் கூட வருகின்றன. ''உங்கள் காய்கறி வாடுவது இல்லையா'' என்று கேட்டேன். ''நாங்கள் யூரியா, டீ.ஏ.பீ என்று உப்பு எதுவும் போடுவது இல்லை'' என்றார்கள்.

நன்றி: திரு. நம்மாழ்வார்

இந்தக் கட்டுரை நான் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட 'சிம்பிளா தோட்டம் போடு' என்கிற புத்தகத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக